தமிழ்நாடு

பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்- தமிழக கவர்னருக்கு சாந்தன் கடிதம்

Published On 2022-06-09 02:57 GMT   |   Update On 2022-06-09 02:57 GMT
  • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.

வேலூர்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் தனக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, சாந்தன் கடிதம் அனுப்பி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. அதனால் இந்த வழக்கில் கைதான மற்ற 6 பேரும் தங்களையும் விடுதலை செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சாந்தன் தனது விடுதலை தொடர்பாக சிறை நிர்வாகம் மூலம் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இலங்கையில் வசித்த எனது தந்தை உயிரிழந்தபோது இறுதிசடங்கிற்கு கூட செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது தாயார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

தாயாரை கவனிக்கவும், குடும்பத்தை பிரிந்து, அனைத்து ஆசைகளையும் மறந்து சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் எனக்கு குடும்பத்தோடு இணைந்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News