தமிழ்நாடு செய்திகள்

அரை நிர்வாணப்படுத்தி ராக்கிங்- தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசில் புகார்

Published On 2022-11-10 14:54 IST   |   Update On 2022-11-10 14:54:00 IST
  • தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

வேலூர்:

வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர்.

முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி டவுசருடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரம் செய்துள்ளனர்.

குட்டிக்கரணம், தண்டால் எடுப்பது, மாணவர்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க செய்து ராக்கிங் கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் கடிதம் வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

ராக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொடுமையான செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் எங்களுடைய மருத்துவ கல்லூரி விடுதியில் ராக்கிங் செய்யப்பட்டதாக வீடியோ மற்றும் மொட்டை கடிதத்தில் புகார் வந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தி 7 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் இது குறித்த விவரங்களையும் இணைத்துள்ளோம். இந்த ராக்கிங் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பாகாயம் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News