சென்னிமலை முருகன் கோவில் பற்றி சர்ச்சை கருத்து: தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது
- சென்னிமலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணனை போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி கிறிஸ்தவ போதகரான அர்ஜூனன் என்கிற ஜான் பீட்டர் என்பவர் தனது வீட்டில் வழிபாடு நடத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வழிபாடு நடத்த அதே பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டதோடு ஜான்பீட்டர் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னிமலையில் கிறிஸ்தவ முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டு, சென்னிமலை முருகன் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவரான சரவணன்(36), திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன்(40) ஆகிய 2 பேர் மீதும் மதத்தை அவமதித்தல், மத கலவரத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று பாதிரியார் ஸ்டீபனை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.