மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பரை கைது செய்த போலீசார்
- மாணவி தாய், தந்தை 2 பேரும் வேலைக்கு சென்று விட்டதாக கூறினார்.
- மாணவி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுப்பதற்காக சென்றார்.
கோவை:
கோவை அருகே உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்தவரும் மாணவி தந்தையின் நண்பரான காளீஸ்வரன் என்ற சொக்கன் (வயது 41) என்பவர் மாணவியின் வீட்டிற்கு வந்தார்.
அவர் மாணவியிடம் உனது தந்தை எங்கே என்று கேட்டார். அதற்கு மாணவி தாய், தந்தை 2 பேரும் வேலைக்கு சென்று விட்டதாக கூறினார். பின்னர் காளீஸ்வரன் மாணவியிடம் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என கேட்டார். மாணவி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுப்பதற்காக சென்றார். அப்போது காளீஸ்வரனும் மாணவியின் வீட்டிற்குள் நுழைந்தார். மாணவி தனியாக இருப்பதை அறிந்த அவர் தனது நண்பரின் மகள் என்று கூட பாராமல் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் காளீஸ்வரன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து மாணவி பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காளீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். பின்னர் காளீஸ்வரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.