வேலூர் காகித பட்டறையில் பிளஸ்-1 மாணவன் தற்கொலை
- வேலூர் காகிதப்பட்டறை தலையாரி மானியம் தெருவை சேர்ந்த அவரது மாமா மனோகரன் என்பவரது வீட்டில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.
- தன்னைவிட வயது குறைந்தவர்களுடன் பள்ளிக்கு செல்வது பிடிக்கவில்லை என சதீஷ் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார்.
வேலூர்:
சென்னை ஆர்.கே. நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர் மகன் சதீஷ் (வயது19). இவர் சென்னையில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தார். இதில் தேர்ச்சி பெறவில்லை.
இதனை தொடர்ந்து மீண்டும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். பின்னர் அவரை காட்பாடி காங்கேநல்லூர் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் பிளஸ்-1 வகுப்பில் சேர்த்தனர்.
வேலூர் காகிதப்பட்டறை தலையாரி மானியம் தெருவை சேர்ந்த அவரது மாமா மனோகரன் என்பவரது வீட்டில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.
தன்னைவிட வயது குறைந்தவர்களுடன் பள்ளிக்கு செல்வது பிடிக்கவில்லை என சதீஷ் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அவரது மாமா வீட்டில் 2-வது மாடியில் உள்ள அறைக்கு சென்ற மாணவன் சதீஷ் அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தூங்கினார்.
இதனைக் கண்டு அவரது உறவினர்கள் சதீஷை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.