தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது

Published On 2024-02-10 04:23 GMT   |   Update On 2024-02-10 05:13 GMT
  • நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்கள்.
  • நீட் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரிகளில் சேர தகுதி உள்ளவர்களாக கருதப்படுவார்கள். அந்த அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான தேர்வு மே மாதம் 5-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இன்று முதல் ஆன்லைன் வழியாக மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். nta.ac.exams, nta.ac.in.neet ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் 9-ந் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் எழுதி வருகிறார்கள்.

அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடிகிறது.

நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்கள். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதக் கூடியவர்கள் மற்றும் ஏற்கனவே தேர்வு எழுதி எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் வாய்ப்பை இழந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். நீட் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News