தமிழ்நாடு

நர்சு கொலை- கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-10-05 08:36 GMT   |   Update On 2022-10-05 08:36 GMT
  • நான்சி நடத்தையில் சந்தேகப்பட்ட நான் கொலை செய்ய திட்டமிட்டேன்.
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எனது மனைவி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

கோவை:

கோவை ரத்தினபுரி ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார். தனியார் நிறுவன ஊழியர்.

இவரது மனைவி நான்சி (வயது 32). இவர் பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்சி தனது கணவரை பிரிந்து வசித்து வந்தார்.

சம்பவத்தன்று மனைவி வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு சென்ற வினோத்குமார் அவருடன் ஏற்பட்ட தகராறில் நான்சியை குத்தி கொலை செய்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை குத்தி கொலை செய்த வினோத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறேன். எனது மனைவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து எனது மனைவி என்னை பிரிந்து சென்றார். எனது மகளை எனது பெற்றோர் வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் நான்சிக்கு அவரது உறவுகார வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். இந்த விவகாரம் உறவினர்கள் மூலமாக எனக்கு தெரிய வந்தது.

இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது அவர் தான் விடுதியில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தனக்கு யாரிடமும் தொடர்பு இல்லை என பேசினார். அவர் கடந்த 8 மாதங்களாக மகளை கூட பார்க்க வரவில்லை. இதனால் அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை தினசரி பின் தொடர்ந்து சென்றேன்.

அப்போது தான் அவர் விடுதியில் தங்காமல் வேறு இடத்தில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட நான் கொலை செய்ய திட்டமிட்டேன்.

சம்பவத்தன்று நான்சியை சந்திப்பதற்காக அவரது ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது அவருடன் அலுவலர்கள் இருந்தனர். இதனால் நான் திரும்பி வந்து விட்டேன். பின்னர் மதியம் கூட்டம் இல்லாத நேரத்தில் கத்தியை பாக்கெட்டில் மறைத்து வைத்துக்கொண்டு சென்றேன். பின்னர் எனது மனைவியை தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் வா என அழைத்தேன். அவரும் வந்தார். பின்னர் பிரசவ வார்டு அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றேன்.

அப்போது அவர் அலட்சியமாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் குத்தினேன். அவர் தடுத்ததால் என கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் நான் எனது மனைவியை கீழே தள்ளி அவரது மார்பு, வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினேன்.

இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். பின்னர் நான் அங்கு இருந்து தப்பிச் சென்றேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எனது மனைவி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

என்னையும் எனது மகளையும் தவிக்க விட்டு சென்ற ஆத்திரத்தில் கொலை செய்தேன். பின்னர் போலீசார் என்னை விசாரணை நடத்தி கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அந்த அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

போலீசார் கைது செய்யப்பட்ட வினோ த்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News