தமிழ்நாடு செய்திகள்
கரை ஒதுங்கிய முருகன் சிலை
வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 1½ அடி முருகன் சிலை
- வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
- முருகன் சிலை நாகை அருங்காட்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் முருகன் சிலை ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கி கிடந்தது.
இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தை சேர்ந்த வினோத்குமார்(வயது 38) என்பவர் வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர் ரவிக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் அவர் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
சுமார் 1½ அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன அந்த சிலையை அவர் தனது அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.
பின்னர் இதுகுறித்து ரவி, வேதாரண்யம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த சிலை நாகை அருங்காட்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிலை அங்கு எப்படி வந்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.