தமிழ்நாடு

குழந்தை கை இழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியீடு

Published On 2023-07-05 06:57 GMT   |   Update On 2023-07-05 06:57 GMT
  • ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை.
  • Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தை முகம்மது மகிருக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர்.

குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி வார்டில் இருந்த நர்சின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன்படி, விசாரணை குழு நேற்று தனது விசாரணையை தொடங்கியது. ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 2-வது டவரில் உள்ள அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதலாவதாக குழந்தையின் தாய் அஜிஷாவிடம் விசாரணை நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை நடைபெற்றது. அவரிடம் வார்டில் நடந்தவைகள் குறித்தும், எப்போதில் இருந்து குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட்டது என்பது உள்ளிட்ட மொத்தம் 3 பக்கங்களில் 21 கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விகள் அனைத்திற்கும் அஜிஷா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

இந்த நிலையில், விசாரணை குழுவின் அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே கால தாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Venflon ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலம் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருந்து கசிவால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிற மாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர்.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார். ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை.

Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News