தமிழ்நாடு

மது அருந்தும் தகராறில் பட்டாசு ஆலை தொழிலாளியை அடித்துக்கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2023-11-15 08:22 GMT   |   Update On 2023-11-15 08:22 GMT
  • தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர்.
  • மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகேயுள்ள வெற்றிலையூரணி அரசரடி தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அதே ஆலையில் விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். நண்பர்களான 4 பேரும் பெரும்பாலான நேரங்களில் பணி முடிந்ததும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் மற்ற மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுந்தரை மீட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கொலையுண்ட சுந்தரின் தாய் வெள்ளத்தாய் (70) கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மதன்குமார், சரவணக்குமாரை கைது செய்த போலீசார் தலைமறைவான நாகேந்திரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தான் சுந்தர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News