தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: கனகராஜ் இறந்த இடத்தில் அனுமதியுடன் வேகத்தடை அமைக்கப்பட்டதா?- சி.பி.சி.ஐ.டி. விசாரணை

Published On 2023-07-26 06:32 GMT   |   Update On 2023-07-26 06:32 GMT
  • ஆத்தூர் நகர சபை அலுவலகத்திற்கு நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர்.
  • புறவழிச்சாலை இணைப்பு சாலையில் உள்ள வேகத்தடை தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர்

ஆத்தூர்:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் 45, எடப்பாடியை சேர்ந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ஆத்தூர் அருகே புறவழிச்சாலையில் மர்மமாக இறந்தார். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்தனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கனகராஜ் இருந்ததால் இந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ளது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீலகிரி, சேலம் மாவட்டத்தில் கனகராஜ் இறந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆத்தூர் நகர சபை அலுவலகத்திற்கு நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். அவர்கள் நகர சபை அலுவலகத்தில் இருந்த என்ஜினீயர் மலர் கொடியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஆத்தூர் புறவழிச்சாலையை இணைக்கும் கடைவீதி, கோட்டை, உப்பு ஓடை வழியே செல்லும் சாலையில் வேகத்தடைகள் எத்தனை உள்ளன. வேகத்தடைகள் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டதா? வேகத்தடை அமைத்தபோது பணிபுரிந்த நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உள்பட அலுவலர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தவர்கள் குறித்தும் விசாரித்தனர்.

மேலும் கனகராஜ் இறந்ததாக கூறப்பட்ட முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் ஏன் வேகத்தடை அமைக்கப்பட்டது என்பது, அதற்கான ஆவணங்கள் நகராட்சியில் உள்ளதா ? என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து புறவழிச்சாலை இணைப்பு சாலையில் உள்ள வேகத்தடை தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,

ஆத்தூர் புறவழிச்சாலையின் இணைப்பு சாலையான ஆத்தூர் நகரில் இருந்து கோட்டை வழியாக செல்லும் சாலையில் வேகத்தடையில் கனகராஜ் இறந்த நாளில் வேறு ஒருவர் விழுந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த வேகத்தடை அனுமதியுடன் அமைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News