கொடநாடு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவரின் சகோதரருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். இவர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர். கனகராஜை கைது செய்வதற்குள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வந்த அவர் கடந்த வாரம் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இன்று இதய அடைப்பை நீக்க ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சேலத்தில் இருந்து தனபாலனை போலீசார் ஆம்புலன்சில் அழைத்து சென்றபோது தனது 2 மகன்களையும் முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும் என்று கதறி அழுதார்.