தமிழ்நாடு செய்திகள்

சந்திரயான்-3 லேண்டர் படங்களை வைத்து நிலவில் கனிமங்கள் ஆய்வு: தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி விஞ்ஞானி செந்தில்குமார்

Published On 2023-08-28 13:25 IST   |   Update On 2023-08-28 13:25:00 IST
  • அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் கருத்தரங்கில் சூரிய குடும்பத்தை பற்றியும், கிரகத்தை பற்றியும் உலக அளவில் நடக்கும் ஆராய்ச்சி பற்றியும் விளக்கப்படுகிறது.
  • ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் சுற்றுச்சுற்றி படம் எடுத்து வருகிறது.

சேலம்:

சேலம் அரசு கலைகல்லூரி புவி அமைப்பியல் துறை மற்றும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான சூரிய குடும்பம் மற்றும் நிலவு தொடர்பான 2 நாள் அறிவியல் கருத்தரங்கம் சேலம் அரசு கலைக்கல்லூரியில் இன்று தொடங்கியது.

கருத்தரங்கிற்கு அரசு கல்லூரி முதல்வர் செண்பகலட்சமி தலைமை வகித்தார். இதில் ஐதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் கலந்து கொண்டு அரசு கலை கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் செயல்பாடுகள் மற்றும் கோள்களில் உள்ள தட்ப வெட்ப நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் புவி அமைப்பியல் உள்தர ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பேராசிரியர்கள், அரசு கலை கல்லூரியில் பயிலும் இயற்பியல், புவியியல் மற்றும் புவி அமைப்பியல் துறை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் கருத்தரங்கில் சூரிய குடும்பத்தை பற்றியும், கிரகத்தை பற்றியும் உலக அளவில் நடக்கும் ஆராய்ச்சி பற்றியும் விளக்கப்படுகிறது. அதே போல இந்தியாவில் எவ்வாறு ஆராய்ச்சி நடைபெற்றது என்பதை குறித்து மாணவர்களிடம் பேச இருக்கிறோம்.

ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் சுற்றுச்சுற்றி படம் எடுத்து வருகிறது. அதனுடைய டேட்டா வைத்து ஆராய்ச்சி நடத்தி வருகிறோம். தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 லேண்டர் படம் எடுத்து வருகிறது. அந்த டேட்டாவை வைத்து நிலவில் இருக்கும் கனிமம், மண், கல் உள்ளிட்டவை குறித்து விரைவில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News