தமிழ்நாடு

குண்டுகளால் துளைக்கப்பட்ட விசைப்படகை இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாகை துறைமுகத்தில் விசைப்படகை இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு- 47 குண்டுகள் துளைத்துள்ளது கண்டுபிடிப்பு

Published On 2022-10-27 07:30 GMT   |   Update On 2022-10-27 07:30 GMT
  • நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நாகப்பட்டினம்:

மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 21-ந் தேதி அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது சமிக்ஜை செய்தும் நிற்காமல் விசைப்படகு சென்றதாக கூறி இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை வானகிரியை சேர்ந்த மீனவர் வீரவேல் (வயது 31) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். மேலும் விசைப்படகு மீதும் பல குண்டுகள் பாய்ந்தன.

இந்த தாக்குதலில் காயமடைந்த வீரவேல் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 9 மீனவர்கள் காயத்துக்கு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படையினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள் விசைப்படகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து படகை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News