தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு- டன் ரூ.3000 வரை விற்பதால் மகிழ்ச்சி

Published On 2023-07-11 04:04 GMT   |   Update On 2023-07-11 04:04 GMT
  • பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலநிலையாக உள்ளது.
  • கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு உப்பள உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி ஆனைகுடி, பள்ளமோர்க்குளம், வாலிநோக்கம், தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, நதிப் பாலம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள உப்பளங்களில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவு பொருட்களின் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு, தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழிற் சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. பொதுவாக பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலநிலையாக உள்ளது.

தற்போது வெயில் சுட்டெரிப்பதால் உப்பள பாத்திகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற மாதங்களில் மழை காலம் என்பதால் காற்றின் ஈரப்பதத்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது குறித்து திருப்புல்லாணி முன்னாள் ஊராட்சி தலைவர் முனியசாமி கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு உப்பள உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது உப்பளங்களில் உப்பு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் உப்பு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்கப்படுகிறது.

சீசன் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உப்பளங்களில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையிலும் உப்பின் விலை உயர்ந்துள்ளதால் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News