நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்வு
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது.
- முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 22-ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-465, பர்வாலா-395, பெங்களூரு-450, டெல்லி-390, ஹைதராபாத்-400, மும்பை-450, மைசூர்-455, விஜயவாடா-385, ஹொஸ்பேட்-410, கொல்கத்தா-470.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.109 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 77 என நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.