கருமுட்டை விவகாரம்- ஓசூர், திருப்பதி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விசாரணைக்கு ஆஜர்
- கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
- தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் ஏற்கனவே ஈரோட்டை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய தனியார் ஆஸ்பத்திரிக்கும் விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர்கள், டாக்டர்கள் ஒரு காரிலும், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த தனியார் மருத்துவமனையை சேர்ந்த நிர்வாகிகள், டாக்டர்கள் ஒரு காரிலும் வந்தனர்.
பின்னர் அவர்கள் நேராக போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு உள்ளே சென்றனர். அவர்கள் தங்களுடன் முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றனர். அவர்கள் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.