தமிழ்நாடு

நெல்லை-தென்காசி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

Published On 2023-03-09 06:34 GMT   |   Update On 2023-03-09 06:34 GMT
  • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்து இருந்தது.
  • நெல்லையில் இருந்து இன்று காலை 10.20 மணிக்கு அதிவேக ரெயிலானது புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.

நெல்லை:

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு தென்மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.

தென்னக ரெயில்வேயில் அதிக அளவு வருவாயை கொடுக்கும் வழித்தடங்கள் கொண்டதாக இந்த வழித்தடம் உள்ளது. ஆனால் சிக்னல்களுக்காக பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ரெயில்கள் மணிக்கணக்கில் காத்து நின்று செல்வதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

இதன் காரணமாக நெல்லை-தென்காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளுடன், பாதைகள் பலப்படுத்தப்பட்டு வேகம் அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பாக 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடம் 2012-ல் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே அந்த பாதையில் ரெயில்கள் இயங்கி வருகிறது.

அதன் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்து இருந்தது.

அதன்படி நெல்லையில் இருந்து இன்று காலை 10.20 மணிக்கு அதிவேக ரெயிலானது புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.

மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து புறப்பட இருந்த இந்த ரெயில் சோதனை ரத்து செய்யப்பட்டது. அதிவேக சோதனை ஓட்டத்திற்கு பிறகு நெல்லை-தென்காசி வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டால் அந்த வழியாக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் பயண நேரம் குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News