தமிழ்நாடு
கள்ளக்குறிச்சியில் ஹெலிகாப்டர் விபத்து? வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோவால் பரபரப்பு
- திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது.
- அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மையனூர், மெய்யூர் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து, 4 மணி நேரமாக சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் வருகை தந்து விசாரணை நடத்தினார். ட்ரோன் மூலமாகவும் போலீசார் தேடி வந்தனர்.
மேலும், திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது. அந்த வீடியோ 2021ம் ஆண்டு ஊட்டியில் நடந்தது என்றும் அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.