கோத்தகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: 5 இடங்களில் மண்சரிவு-மரங்கள் முறிந்து விழுந்தன
- இன்று காலை முதல் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி நடந்து வருகிறது.
- பந்தலூர் அடுத்த சேரம்பாடி காபிகாடு பகுதியில் பலத்த மழை பெய்தது.
அரவேணு:
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும் சாலைகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் தொடர்ச்சியாக 3 இடங்களில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையின் நடுரோட்டில் விழுந்தது.
இதேபோல் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி நடந்து வருகிறது.
மரங்கள் முறிவு, மண்சரிவு காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பந்தலூர் அடுத்த சேரம்பாடி காபிகாடு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மழைக்கு சாலையோரம் நின்ற ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நீலகிரியில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து நீலகிரிக்கும் வாகன போக்குவரத்து முடங்கியது.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.