தமிழ்நாடு

பூச்சி மருந்து கலந்ததாக புகார் கூறப்பட்ட குடிநீர் தொட்டியில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததாக புகார்: சுகாதாரத்துறையினர் விசாரணை

Published On 2023-12-07 08:42 GMT   |   Update On 2023-12-07 08:42 GMT
  • பொதுமக்களில் ஒரு சிலர் ஊரின் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை பரிசோதனை செய்தனர்.
  • கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் உள்ள யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் ஆனைகுளம் ஊராட்சி துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசியதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது.

இதையடுத்து பொதுமக்களில் ஒரு சிலர் ஊரின் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான மருந்து வாசனை வீசி உள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் விரைந்து சென்ற குடிநீரை பரிசோதனை செய்தனர்.

மேலும் கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் உள்ள யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

எனினும் அதில் பூச்சி மருந்தை விஷமிகள் யாரேனும் கலந்தனரா? அல்லது கிருமி நாசினி பவுடர் அதிகம் கலந்ததால் வாசனை உள்ளதா? என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News