இளையராஜாவின் குரல் மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழகத்திற்கு பெருமை- ஆளுநர் தமிழிசை வாழ்த்து
- மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் இளையராஜா என அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
- இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர் என திருமாவளவன் கருத்து
சென்னை:
இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து வருமாறு:-
கிராமிய இசையையும், ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழகத்திற்கும், தமிழருக்கும் பெருமை....
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...
இசைஞானி இளையராஜா அவர்களின் இணையற்ற இசைக்கு இசைந்து அங்கீகாரம் கொடுத்து தமிழ்நாட்டின் இசைக்குரலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிக்கச் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் இளையராஜா என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:-
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜா நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களை இசையால் வென்ற இளையராஜா இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.
இசையால் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர். இந்திய மக்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் ஆற்றுப்படுத்தியவர். இது அவருக்கு சரியான அங்கீகாரம். அவர் இன்னும் உயர்ந்த அங்கீகாரங்களை பெறத் தகுதியானவர். அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்பட எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், கல்வியாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணி சிறக்கட்டும்!
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.\
'மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள #இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா அவர்கள்' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.