ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
- சிறுமி கடந்த 29-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார்.
- சிறுமியின் தந்தை மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள அத்திகானூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார்.
இதனை நம்பி அந்த சிறுமி கடந்த 29-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அந்த சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தந்தை மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது மகளை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்நகர மேடு பகுதியை சேர்ந்த ஜோதி மகன் சந்தோஸ் (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர்.
அப்போது அந்த சிறுமியை செய்யாறு பகுதிக்கு சந்தோஸ் கடத்தி சென்றது தெரியவந்தது.
உடனே செய்யாறு பகுதிக்கு நேற்று விரைந்து சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். பின்னர் சந்தோசை மத்தூருக்கு அழைத்து வந்தனர்.
இது தொடர்பாக போலீசார் சந்தோஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கைதான அவரை கிருஷ்ணகிரி மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.