தமிழ்நாடு

தங்கமணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவதை காணலாம்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது சிக்கிய சொத்து ஆவணங்கள் சரிபார்ப்பு

Published On 2022-07-20 08:23 GMT   |   Update On 2022-07-20 10:55 GMT
  • லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது சிக்கிய சொத்து ஆவணங்கள் குறித்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.
  • தங்கமணியின் வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல்:

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் துறை அமைச்சராகவும், தொழில் துறை அமைச்சராகவும் பின்னர் மின்சார துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் தங்கமணி. இவர் தற்போது குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சென்னை அருகே பனையூரில் உள்ள பங்களா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், அவரது ஆடிட்டர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் 2.38 கோடி ரூபாய் ரொக்கம், 1.130 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, கணக்கில் வராத, 2.16 கோடி ரூபாய், மொபைல் போன்கள், பல வங்கிகளின் 'லாக்கர்' சாவிகள், கணினி 'ஹார்டு டிஸ்க்'குகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தபாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் அவரது சொத்து ஆவணங்களை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சரிபார்த்து வருகின்றனர். இதில் அவரது வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்கள், அதற்கான ஆவணங்கள் குறித்தும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

மேலும் சோதனையின்போது சிக்கிய சொத்து ஆவணங்கள் குறித்தும் மதிப்பீடு செய்து வருகின்றனர். இதையொட்டி தங்கமணியின் வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News