தமிழ்நாடு

மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி- பயிரை காப்பாற்ற சென்றவர்கள் உயிரை இழந்த சோகம்

Published On 2022-09-27 02:57 GMT   |   Update On 2022-09-27 02:57 GMT
  • அன்பரசன் தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார்.
  • கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் வயலில் உள்ள பயிரை காப்பாற்றுவதற்காக தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்

திருவாரூர்:

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தளிக்கோட்டையை சேர்ந்தவர் அன்பரசன்(வயது 55) விவசாயியான இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. அன்பரசன் தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த தனது வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்காக அன்பரசன் தனது மகன் அருள்முருகனை(வயது 25) அழைத்துக்கொண்டு நள்ளிரவு 2 மணியளவில் வயலுக்கு சென்றார்.

அங்கு சென்ற அவர்கள், கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் வயலில் உள்ள பயிரை காப்பாற்றுவதற்காக தண்ணீரை வடியவைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அருள்முருகன் மீது மின்னல் தாக்கியது. அந்த நேரத்தில் அருள்முருகனின் அருகில் அவரது தந்தை அன்பரசன் நின்று கொண்டு இருந்ததால் அவர் மீதும் மின்னல் தாக்கியது. இதில் தந்தை-மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த அருள் முருகனுக்கும், மன்னார்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 26 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மின்னல் தாக்கி தந்தை-மகன் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags:    

Similar News