தமிழ்நாடு

திருமங்கலம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் மீது கல்வீசிய கல்லூரி மாணவர் கைது

Published On 2023-04-19 04:59 GMT   |   Update On 2023-04-19 04:59 GMT
  • ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
  • ரெயில்வே போலீசார் முத்து முனியாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமங்கலம்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து கடந்த 16-ந் தேதி மாலை 6.15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தை கடந்து செல்லும்போது இரவு 9.20 மணி அளவில் முன்பதிவு இல்லாத பெட்டியில் மர்ம நபர்கள் சிலர் திடீரனெ கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் ரெயிலில் பயணித்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கலா (வயது28), தென்காசி அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வி ஆகியோர் படுகாயமடைந்தனர். கலாவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே 2 பெண்களும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி ஆலோசனையில் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் தனிப்படை அமைத்து கல்வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது திருமங்கலம் கூழையாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் முத்து முனியாண்டி(20) என தெரியவந்தது. அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர் சம்பவத்தன்று போதையில் ரெயில் மீது கல்வீசியுள்ளார்.

இதையடுத்து ரெயில்வே போலீசார் முத்து முனியாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News