தமிழ்நாடு

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் பலி

Published On 2023-10-09 04:39 GMT   |   Update On 2023-10-09 04:39 GMT
  • சாஜிவுதீன் பாத்திமா மற்றும் முபாரக் கீழ்பவானி வாய்க்காலில் கை, கால் கழுவதற்காக இறங்கி உள்ளனர்.
  • அலறல் சத்தம் கேட்டு அவர்களது உறவினர்கள் மற்றும் வாய்க்காலில் இருந்த சிலர் ஓடி வந்தனர்.

சத்தியமங்கலம்:

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சாஜிவுதீன் பாத்திமா. இவரது மகன் முபாரக் (வயது 18). சாஜிவுதீன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

முபாரக் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் மதியம் சாஜிவுதீன் பாத்திமா தனது மகன் முபாரக் மற்றும் உறவினர்களுடன் காரில் கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வந்தனர்.

சத்தியமங்கலத்தில் சுற்றிப் பார்த்துவிட்டு சத்தியமங்கலம் அடுத்த செண்பகப்புதூரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு வந்தனர். அப்போது சாஜிவுதீன் பாத்திமா மற்றும் முபாரக் கீழ்பவானி வாய்க்காலில் கை, கால் கழுவதற்காக இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சாஜிவுதீன் பாத்திமா மற்றும் முபாரக் நீரில் மூழ்கினர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அவர்களது உறவினர்கள் மற்றும் வாய்க்காலில் இருந்த சிலர் ஓடி வந்தனர். இதையடுத்து அவர்கள் சாஜிவுதீன் பாத்திமாவை காப்பாற்றி விட்டனர். ஆனால் அவரது மகன் முபாரக் அதற்குள் நீரில் மூழ்கி விட்டார்.

பின்னர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய முபாரக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை வரை தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அவரைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் முபாரக்கை தேடினர்.

அப்போது வாய்க்காலின் சிறிது தூரத்தில் முபாரக் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News