தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

Published On 2022-08-11 03:21 GMT   |   Update On 2022-08-11 03:21 GMT
  • மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
  • மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 35). இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 6-ந் தேதி மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை அக்கரைப்பேட்டை திடீர்குப்பத்தை சேர்ந்த காமராஜ் (40), பூவரசன் (22), அன்பு (32), அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்லையன் (52), பாலு (55), செல்லதுரை (35), முருகானந்தம் (42), ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த ஸ்டீபன் (25), முருகன் (24) ஆகிய 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து திரிகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை கீச்சாங்குப்பம் மற்றும் அக்கரைப்பேட்டை மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News