தமிழ்நாடு செய்திகள்
கைது

13 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் கைது

Published On 2022-04-22 09:43 IST   |   Update On 2022-04-22 09:43:00 IST
கர்நாடகாவை சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் எலந்தூர் என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஈரோடு மாவட்டம் பரிசாபாளையம் என்ற பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது சத்தியமங்கலம் தேசிபாளையம் காமராஜ் நகர் காலனியை சேர்ந்த நாகராஜ் (23) என்ற வாலிபர் அந்த பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நாகராஜுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று நாகராஜ் சிறுமியை அழைத்து கொண்டு கைக்காலன்குட்டை என்ற பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்த திருமணத்தை அவரது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து நாகராஜ் தேசிபாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து நாகராஜ் குடும்பம் நடத்தும் தகவல் சைல்டு அமைப்புக்கு தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் லூர்துமேரி, கற்பகம், பிரேமா ஆகியோர் தேசிபாளையத்துக்கு சென்றனர்.

அப்போது சிறுமிக்கு கன்னட மொழி மட்டுமே தெரியும் என்பதால் அவர்கள் கன்னடத்தில் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தான் 7-ம் வகுப்பு வரை படித்து இருப்பதாகவும், தனது பெற்றோர் இறந்து விட்டதால் அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது நாகராஜுவுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் நிலையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்த நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News