கடைக்கு சென்ற மகள் வர தாமதமானதால் பதற்றத்தில் ரெயிலை நிறுத்திய பெண்
ஈரோடு:
கோவையில் இருந்து இன்று காலை மயிலாடுதுறைக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் காலை 8.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது. பின்னர் 8.50 மணிக்கு மீண்டும் ஈரோட்டில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டது.
ரெயில் நிலையத்தை விட்டு ரெயில் செல்ல தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த ரெயில் திடீரென நின்றது. உடனே என்னவோ ஏதோ வென்று பதறி அடித்துக் கொண்டு போலீசார் அந்த ரெயிலை நோக்கி ஓடினர்.
அப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த ஒரு பெண் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியது தெரியவந்தது.
இது குறித்து அந்த பெண்ணிடம் ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்தபோது, நானும் எனது மகளும் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தோம். எனது மகள் ஈரோடு ரெயில் நிலையத்தில் தின்பண்டம் வாங்க இறங்கி சென்றார். ஆனால் அவர் வருவதற்குள் ரெயில் கிளம்பி விட்டதால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினேன் என்றார்.
ரெயில் நின்றதும் அவரது மகள் மற்றும் சில பயணிகள் ரெயிலில் ஏறினார். பின்னர் ரெயில்வே போலீசார் அந்தப் பெண்ணின் முகவரி செல்போன் போன்ற விவரங்களை வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனர். இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ரெயிலை நிறுத்தி அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.