தமிழ்நாடு
காவேரிபட்டணத்தில் எருது விடும் திருவிழா
காணும் பொங்கல் பண்டிகையொட்டி காவேரிப்பட்டணத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் காணும் பொங்கலை ஒட்டி எருது விடும் விழா நடப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் காணும் பொங்கலன்று முழுஊரடங்கால் நடைபெறவில்லை.
இதனால் நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது. நேற்று மதியம் 1 மணிக்கு எருதுகளை குளிப்பாட்டி வண்ணம் தீட்டி கொம்புகளில் அலங்காரம் தட்டிகளை கட்டி மதியம் 3 மணியளவில் சேலம் சாலையில் உள்ள விநாயகர் கோயில் முன் பூஜை செய்து பின்னர் ஊர் தலைவர்கள், ஊர் கவுண்டர்கள் மற்றும் இளைஞர்கள் எருதுகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
எருதுகளை இளைஞர்கள் இரண்டு பக்கமும் கயிறுகளை பிடித்துக்கொண்டு விநாயகர் கோவிலை சுற்றி வலம் வந்தனர். இந்த ஆண்டு இருபக்கங்களிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எருதுகளை அடக்கும் வீரர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர் எருதுகளை துன்புறுத்தி இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மாலை திருவிழா முடிக்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எருது விடும் திருவிழா காண வந்திருந்தனர்.
எருது விடும் திருவிழா மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்படி, ஏ.டி.எஸ்.பி விவேகானந்தன் மற்றும் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன் மேற்பார்வையில் காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணகிரி மகளிர் இன்ஸ்பெக்டர் சுமித்ரா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், ராஜா, மற்றும் 75-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.