தமிழ்நாடு செய்திகள்
கைதான கண்ணன் - கொலை செய்யப்பட்ட கற்பகம்

விருதுநகரில் நடத்தை சந்தேகத்தில் மனைவி குத்திக்கொலை- வங்கி ஊழியர் வெறிச்செயல்

Published On 2022-01-10 11:07 IST   |   Update On 2022-01-10 11:07:00 IST
விருதுநகரில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை வங்கி ஊழியர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர்:

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவரது மனைவி கற்பகம் (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 5 மற்றும் 1½ வயதில் குழந்தைகள் உள்ளனர்.

கண்ணன் மதுரை திருமங்கலத்தில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வங்கி ஊழியராக இருந்து வந்த அவரது தந்தை கிருஷ்ணன் இறந்ததை தொடர்ந்து, அவரது வேலை கருணை அடிப்படையில் கண்ணனுக்கு கிடைத்தது.

வேலைக்காக தினமும் விருதுநகரில் இருந்து திருமங்கலத்திற்கு கண்ணன் சென்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு மனைவி கற்பகத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதே போல் இன்று காலையும் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி கற்பகத்தை சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ஆத்திரத்தில் மனைவியை கொன்றதை நினைத்து கண்ணன் வேதனை அடைந்தார். அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைய முடிவு செய்தார்.

அப்போது கண்ணனின் 2 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்களை வீட்டிலேயே விட்டு விட்டு விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கண்ணனின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கற்பகம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார் வந்த பிறகே கண்ணன், அவரது மனைவியை கொலை செய்த தகவல் அக்கம், பக்கத்தினருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் ஏராளமானார் திரண்டு விட்டனர். விசாரணைக்கு பின் கற்பகத்தின் உடலை போலீசார் அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து கணவர் கண்ணனை கைது செய்தனர்.

நடத்தை சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை வங்கி ஊழியர் கொலை செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News