செய்திகள்
யானைகள்

இன்று யானைகள் தினம்- வனப்பகுதியில் புதிய தாவரங்கள் வளர உதவும் யானைகள்

Published On 2021-08-12 10:07 IST   |   Update On 2021-08-12 10:07:00 IST
யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பர், நம் முன்னோர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

கம்பீரத்தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானையை காடுகளின் பாதுகாவலன் என்று அழைப்பர்.

இயற்கைக்கும், மனிதனுக்கும் ஒரு உன்னத தோழனாக யானை விளங்குகிறது. வளமான வனங்களுக்கு ஆதாரமாக விளங்கும் யானைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 12-ந் தேதி அதாவது இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 16 மாநிலங்களில் இதற்கான திட்டம் அமலில் உள்ளது. யானைகள் கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

இதுகுறித்து வன உயிரின ஆர்வலரும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செயல் அலுவலருமான இளங்கோவன் கூறியதாவது:-

மனிதர்களின் செயல்பாடுகளினால் யானைகள் குறைந்து வருகின்றன. அதாவது அதிக யானைகள் வேட்டையாலும், நச்சு உணவாலும், நோய் தாக்குதலாலும், மின்சாரம் பாய்ந்தும், ரெயிலில் அடிபட்டும் இறக்கின. இதுதவிர பிற காரணங்களாலும் யானைகள் உயிர் இழப்பது உண்டு.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பர், நம் முன்னோர். அந்த அளவிற்கு யானைகளால் எண்ணற்ற பயன்கள் உள்ளன. யானைகளை காடுகளின் வேட்டைக்காரர் எனவும் அழைக்கிறார்கள்.

யானைகளின் சாணத்தில் ஊட்டமாக உணவுக்கழிவு இருப்பதால் அதில் விழும் விதைகள் முளைத்து புதிய தாவரங்கள் உருவாகி காடுகளை வளமாக்க உதவுகிறது.

யானை மலை போன்று காட்சி தருவதால் ஓங்கல் என்றும், கரிய நிறமுடன் இருப்பதால் கள்வன் என்றும், யானைக்கூட்டத்தை கடகம் என்றும் நம் தமிழ் இலக்கியங்கள் அழைக்கின்றன.

வேழம், களிறு, களபம், உம்பர், இருள் என பல்வேறு சிறப்பு பெயர்களும் யானைக்கு உண்டு. இவ்வாறு பல்வேறு நன்மைகளை அளிக்கும் யானையை அழியாமல் பாதுகாப்பதே நமது கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News