செய்திகள்
திருவண்ணாமலை அருகே பஸ் மீது கார் மோதல்- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
திருவண்ணாமலை அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகரை சேர்ந்தவர் ஸ்ரீபால் (வயது 42). சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பத்மபிரியா (36). இவர்களுக்கு ஆரியா (12) என்ற மகனும், மிருதுளா (8) என்ற மகளும் உள்ளனர்.
பத்மபிரியாவின் தந்தை சதீஷ்குமார்(68), சென்னை மாதவரத்தில் சொந்தமாக லாரிவைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி(60).
இந்த நிலையில் ஸ்ரீபால் தனது மனைவி பத்மபிரியா, குழந்தைகள், மாமனார் சதீஷ்குமார், மாமியார் சாந்தி ஆகியோருடன் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். ஊசாம்பாடி என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஸ்ரீபால், பத்மபிரியா, சாந்தி, சதீஷ்குமார் ஆகியோர் பலியானார்கள். படுகாயமடைந்த ஆரியா, மிருதுளா ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.