செய்திகள்
வெடிவிபத்தில் தரைமட்டமான கட்டிடம்.

சாத்தூர் அருகே 19 பேர் பலியான பட்டாசு ஆலை விபத்துக்கு விதி மீறலே காரணம்

Published On 2021-02-13 08:08 GMT   |   Update On 2021-02-13 08:08 GMT
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 19 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த சம்பவத்திற்கு விதிமீறலே காரணம் என கூறப்படுகிறது.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது. இது விதிகளுக்கு புறம்பானது என கூறப்படுகிறது.

பட்டாசு ஆலை விபத்துக்களை தவிர்க்க மாவட்ட கலெக்டர் தலைமையில் பட்டாசு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை இயக்குநர், வருவாய் அலுவலர், பட்டாசு ஆலை அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து கூட்டம் நடத்தி குறைபாடுகளை களைய வேண்டும். ஆனால் இந்த குழு சரிவர ஆய்வு நடத்தவில்லை என பட்டாசு ஆலைகளில் வேலை பார்க்கும் பலரும் குறை கூறுகிறார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2000 முதல் 2020-ம் ஆண்டு வரை 336 பட்டாசு விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 482 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த 10 ஆண்டுகளில் (2010-2020) 161 விபத்துக்களில் 310 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய-மாநில அரசுகள் இதில் தீவிர கவனம் செலுத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News