அரசியலை விட்டு விலகினாலும் மக்கள் சேவையை தொடருவேன்- அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ்
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
இதற்காக புதுவை சட்டசபை சார்பில் அவருக்கு ஏனாமில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் சிறந்த எம்.எல்.ஏ.வாக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட மல்லாடி கிருஷ்ணாராவிற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் விருது வழங்கினர்.
விழாவில் ஆந்திரா மாநில சபாநாயகர் தமேனி சீத்தாராம், புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது:-
எனக்கு ஓய்வு தேவைப்படுவதால் நான் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். மக்கள் சேவையை தொடர்ந்து செய்வேன். கவர்னருக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு முதல்- அமைச்சருடன் தரையில் அமர்ந்து போராடுவேன். ஏனாம் தொகுதியில் வருகிற தேர்தலில் போட்டியிட போவதில்லை. எனது குடும்பத்தில் இருந்தும் யாரும் போட்டியிட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.