செய்திகள்
கோப்புபடம்

கொடநாடு கொலை வழக்கை விசாரித்த நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி பணியிட மாற்றம்

Published On 2020-12-18 13:00 IST   |   Update On 2020-12-18 13:00:00 IST
கொடநாடு கொலை வழக்கை விசாரித்த நீலகிரி மாவட்ட ம் முதன்மை நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் தாபா காயம் அடைந்தார். மேலும் அங்கிருந்த சில ஆவணங்கள் திருடு போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். வழக்கில் தொடர்புடைய சயான், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தீன் ஜாய், சம்சீர்அலி, பிஜின் குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை ஊட்டி நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை விசாரித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஊட்டி நீதிமன்றத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நீதிபதி வடமலை வழக்கை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்து விசாரித்து வந்தார். இதுவரை 103 சாட்சிகளில் 41 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் கொடநாடு வழக்கை விசாரித்து வந்த முதன்மை நீதிபதி வடமலை நேற்று திடீரென மதுரை நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டி நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு பதிலாக கோவை மாவட்ட கூடுதல் நீதிபதி சஞ்சய் பாபா, நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 21-ந் தேதி பதவியேற்க உள்ளார்.

Similar News