செய்திகள்
கொலை

அனகாபுத்தூரில் மது பாட்டிலால் தலையில் அடித்து நண்பர் கொலை

Published On 2020-11-17 08:08 IST   |   Update On 2020-11-17 08:08:00 IST
அனகாபுத்தூரில் மது பாட்டிலால் தலையில் அடித்து நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அருள் நகர், வைகை தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 60). இவர், தங்கச்சாலை பகுதியில் டி.வி. பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். அப்போது தங்கச்சாலை வள்ளலார் நகரை சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (45), கோபி (45) மற்றும் சுரேஷ் (40) ஆகியோர் நண்பர்களாக பழகி வந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மணிகண்டன் உள்பட 3 பேரும் அனகாபுத்தூரில் உள்ள வாசுதேவன் வீட்டுக்கு வந்தனர். அங்கு தீபாவளியை கொண்டாடினர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் மது அருந்தினர். பின்னர் கோபி, மதுபோதையில் வாசுதேவனின் மகன் நவீன் (32) என்பவரது படுக்கை அறைக்கு சென்று தூங்கினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நவீன், தனது தந்தையை கெடுத்ததோடு இல்லாமல், தனது அறையில் படுத்து தூங்குவதா? என கோபியை கண்டித்தார். உடனே அறையில் இருந்து வெளியே வந்த கோபி, அங்கு படுத்திருந்த மணிகண்டனிடம், ‘இதற்கெல்லாம் நீ தான் காரணம்’ என்று கூறி, அங்கிருந்த மதுபாட்டிலால் மணிகண்டனின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில், படுகாயமடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.

Similar News