செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து முதலமைச்சர் நாளை அறிவிப்பார்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-11-11 05:09 GMT   |   Update On 2020-11-11 05:09 GMT
பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து நாளை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மற்றும் வேட்டைக்காரன்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு போனஸ் தொகையை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 16,300 பேர் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடைகள், ஷூ-சாக்ஸ், தயாராக உள்ளது. விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும்.

பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு முகாமில், தமிழகம் முழுவதும் 45 சதவீத பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளிகள் திறப்பு குறித்து நாளை (வியாழக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News