செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியின் தனித்தன்மையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்யவும் தயார்- நாராயணசாமி

Published On 2020-11-02 08:35 IST   |   Update On 2020-11-02 08:35:00 IST
புதுவை கடற்கரையில் நடந்த விடுதலை நாள் விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றினார். அவர் பேசுகையில், புதுவையின் தனித்தன்மையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம் என கூறினார்.
புதுச்சேரி:

புதுச்சேரி விடுதலை நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்று தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசியகீதம் இசைத்தனர்.

அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி போலீஸ் அணிவகுப்பினை பார்வையிட்டார். அதன்பின் விழாமேடைக்கு திரும்பிய அவர் விடுதலை நாள் உரையை வாசித்தார். தொடர்ந்து போலீஸ், ஊர்க்காவல்படை, தீயணைப்பு படையினரின் அணிவகுப்பு நடந்தது. அவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

புதுவை மாநிலம் அமைதியான மாநிலம் என்பதை நிலைநிறுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறும் விழுக்காடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் சாலை விபத்துகளும் பெருமளவில் குறைந்துள்ளன. பயன்கருதாத பலரது தியாகத்தால் நமக்கு இந்த விடுதலை கிடைத்துள்ளன. விடுதலையின் பயன்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பது அத்தியாக தலைவர்களின் கனவு. அதை நிறைவேற்றி தருவது எங்களது கடமை. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக, வளமாக, நலமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம். புதுவையின் தனித்தன்மையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி கடற்கரையில் உள்ள கைவினை கண்காட்சி அரங்கில் புதுச்சேரி வரலாறு குறித்த கைவினை கண்காட்சியை திறந்துவைத்தார்.

Similar News