செய்திகள்
வெடிகுண்டு வீசப்பட்ட வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

ஆட்டோ டிரைவர் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு

Published On 2020-10-13 04:14 GMT   |   Update On 2020-10-13 04:14 GMT
புதுவையில் ஆட்டோ டிரைவர் வீடு மீது நாட்டுவெடிகுண்டை வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:

முத்தியால்பேட்டை சின்னையாபுரம் ரோடு வ.உ.சி. நகர் அக்காசாமி மடத்து வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 41). ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சவாரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து இருந்தார். இரவில் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவில் இவரது வீட்டிற்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா மற்றும் அக்கம்பக்கத்தினர் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது புகை மண்டலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் நூல் மற்றும் சிறுசிறு கற்கள் சிதறிக்கிடந்தன. வீட்டிற்கு வெளியே இருந்த பானை ஒன்றும் நொறுங்கிக் கிடந்தது.

இதனால் அங்கு அசம்பாவிதம் நடந்து இருப்பதை அறிந்து இதுகுறித்து அவர்கள் முத்தியால்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அவர்கள் நடத்திய சோதனையில் அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்து இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதாவது, அக்காசாமி மடம் கோவில் பகுதியில் ஆட்டோ டிரைவர் ராஜாவின் சகோதரர் பாலமுருகன் வீடு உள்ளது. அதன் அருகே சிலர் அமர்ந்து மது குடித்து கஞ்சா புகைத்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்து பாலமுருகனுடன் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.

இதற்கிடையே போலீசார் விரட்டிய சிலரை ராஜா பிடிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ராஜாவை எச்சரிக்கும் விதமாக அவரது வீடு அருகே அந்த நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள முத்தியால்பேட்டை போலீசார் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து அறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் காட்சிகள் ஏதும் பதிவாகி உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News