செய்திகள்
கொலை

திருமங்கலம் அருகே 17 வயது சிறுமி கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-09-12 09:26 GMT   |   Update On 2020-09-12 09:26 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமணம் ஆன 17 வயது சிறுமி குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வி.அம்மாபட்டியை சேர்ந்தவர் தவுடன். இவரது மனைவி முத்துலட்சுமி.

இவர்களுக்கு ஜெயசக்தி பாலா (வயது 17), என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஜெய்சக்தி பாலாவுக்கும், விருதுநகர் மாவட்டம் மத்திய சேவையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் திருமணம் நடந்தது.

மைனர் பெண்ணுக்கு திருமணம் நடந்ததை அறிந்த விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் 18 வயது பூர்த்தியானவுடன் இருவரும் இணைந்து வாழலாம் என கூறி ஜெயசக்தி பாலாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ஜெயசக்தி பாலா வி. அம்மாபட்டியில் உள்ள கண்மாய் பகுதிக்குச் சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தவுடன் மற்றும் சகோதரர்கள் ஜெயசக்தி பாலாவை பல இடங்களில் தேடி பார்த்தனர். இரவு முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் இன்று காலை கண்மாய் பகுதியில் ஜெய்சக்தி பாலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், டீ கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் அப்போது ஜெயசக்தி பாலாவின் உடலில் 13 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடல் அருகே ஹெட்போன் ஒன்று கிடந்தது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் பெருமாள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஜெயசக்தி பாலாவின் உடல் அருகே கிடந்த ஹெட்போன் யாருடையது? அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இளம்பெண் 13 இடங்களில் கத்தியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News