செய்திகள்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் அதிமுக தலைமையின் முடிவை ஏற்போம்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published On 2020-08-24 07:51 IST   |   Update On 2020-08-24 07:51:00 IST
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வதில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ஈரோடு:

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்தார். அவர் பவானி கூடுதுறையில் புனித நீராடினார். பின்னர் ஈரோடு காலிங்கராயன் இல்லத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம் மூலிப்பட்டி கிராமத்தில் உள்ள தவசிலிங்கசாமி எங்களது குல தெய்வம். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திருச்செந்தூர், பாபநாசம், பவானி கூடுதுறை போன்ற புண்ணிய நதிகளில் தீர்த்தம் எடுத்து செல்கிறேன். அதற்காக பவானி கூடுதுறைக்கு சென்று ஆற்றில் புனிதநீராடி தீர்த்தம் எடுத்து கொண்டு குலதெய்வ கோவிலுக்கு செல்ல உள்ளேன்.

தமிழகத்தின் பிரச்சினைக்குரிய கருத்துக்களை யாரும் பேச வேண்டாம் என்று கட்சியின் தலைமை உத்தரவிட்டு உள்ளது. அரசியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வதில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இந்தநிலையில் முழு ஊரடங்கான நேற்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பவானி கூடுதுறையில் புனித நீராடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Similar News