செய்திகள்
பவானிசாகர் அணையின் எழில்மிகு தோற்றம்

மண்ணால் கட்டப்பட்ட பவானிசாகர் அணைக்கு இன்று வயது 66

Published On 2020-08-19 06:39 GMT   |   Update On 2020-08-19 06:39 GMT
3 மாவட்டங்களை வாழவைக்கும் மண்ணால் கட்டப்பட்ட பவானிசாகர் அணைக்கு இன்று வயது 66 ஆகிறது.
பவானிசாகர்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையோடு பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1948-ம் ஆண்டு பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில் அணையின் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப்பணி 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி நிறைவு பெற்றது. அப்போதைய சென்னை மாகாண முதல்-அமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப்பரப்பு கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதுதவிர பவானி ஆற்று பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்க முடியும். கரையின் நீளம் சுமார் 8.78 கிலோ மீட்டராகும். பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சேறு கழித்து 105 அடி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அணையின் முழுத்தேக்க நீர்ப்பரப்பு 30 சதுர மைல்கள். கீழ்பவானி பிரதானக்கால்வாயின் நீளம் 200 கிலோமீட்டராகும். பிரதான கால்வாயிலிருந்து 800 கிலோமீட்டர் நீளத்திற்கு கிளைவாய்க்கால்களும், 1,900 கிலோ மீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டுள்ளன. அணையில் ஆற்று மதகுகள் 9-ம், கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் 3-ம், நீர் வழிந்தோடி மதகுகள் 9-ம் அமைக்கப்பட்டுள்ளன.

பவானி ஆற்றின் மதகுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 16 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த பவானிசாகர் அணையின் கட்டுமான பணி நடைபெற்ற போது 1953-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், ராஜாஜியும் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டுள்ளனர். 1950 களிலேயே மிக உயரிய தொழில்நுட்பமுள்ள எந்திரங்களை அணை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு தேவையான எந்திரங்கள் லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டது என அணை கட்டுமான பணிக்கு சென்ற அப்பகுதி பெரியவர்கள் கூறுகின்றனர்.

முற்றிலும் மண்ணாலான இந்த அணை 65 ஆண்டுகளை கடந்தும் சிறிதுகூட விரிசல் ஏற்படாமல் உறுதித்தன்மையுடன் உள்ளது. இந்த அணை கட்டப்பட்டதால் 3 மாவட்டங்களில் தரிசுநிலங்கள் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை குடிநீர் ஆதாரம் கிடைத்தது. ஈரோடு மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் இந்த மண் அணை இன்று 66-வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. ஈரோடு கரூர், திருப்பூர் என 3 மாவட்டங்களை வாழவைக்கும் பவானிசாகர் அணை இன்னும் பல நூறாண்டுகள் நிலைத்து நிற்கவேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் நியாயமான ஆசை.
Tags:    

Similar News