செய்திகள்
மண்சரிவு ஏற்பட்டதால் ஊட்டி-கூடலூர் சாலையில் கிடந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய காட்சி.

நீலகிரியில் தொடர் கனமழை: 50 மரங்கள் முறிந்து விழுந்தன- 6 குடும்பத்தினர் மீட்பு

Published On 2020-08-09 12:18 IST   |   Update On 2020-08-09 12:18:00 IST
நீலகிரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. பேலிதளாவில் 50 மரங்கள் முறிந்து விழுந்தன. 6 குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகள் மட்டுமன்றி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் அதிக மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகின்றது. மின் கம்பங்கள், மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளதால் மின் வினியோகம் தடைபட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டியில் பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் தொடர் மழை பெய்ததால் சாலையோரத்தில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக காணப்படுகிறது.

இதற்கிடையே நேற்று ஊட்டியில் இருந்து குருத்துக்குளி கிராமத்துக்கு செல்லும் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். எமரால்டு அருகே பேலிதளா பகுதியில் இருந்து வினோபாஜி நகருக்கு செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடுத்தடுத்து 50-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. இதனால் அப்பகுதியில் வசித்த 6 குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் அறிவுரையின் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ராட்சத மரங்கள் விழுந்ததால் அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு நாள் முழுவதும் போராடி அப்புறப்படுத்தினர். மேலும் 6 குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு எமரால்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். ஊட்டி- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தவளைமலை பகுதியில் கனமழை காரணமாக பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்றும் பாறைகளை உடைத்து அகற்றும் பணி நடந்தது. 3 பொக்லைன் எந்திரங்கள், உதவியோடு பாறைகள் அப்புறப்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலையில் ஒருவழிப்பாதையாக வாகனங்கள் சென்றன.

நேற்று முழுமையாக பாறைகள் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து இரு வழிப்பாதையாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மீட்புப்பணிகள் நடந்து வந்தது. ஊட்டி அருகே கல்லட்டி நீர்வீழ்ச்சியில் கடந்த 2 மாதங்களாக நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது பெய்த தொடர் கனமழையால் வனப்பகுதிகளில் தண்ணீர் உற்பத்தியாவதால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கியது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஊட்டி-8, நடுவட்டம்-82, அவலாஞ்சி-108, எமரால்டு -16, அப்பர்பவானி-65, எடப்பள்ளி-25, கூடலூர்-79, தேவாலா -341, அப்பர் கூடலூர்-62, ஓவேலி-51, செருமுள்ளி-53, பாடாந்தொரை-51, பந்தலூர்-188, சேரங்கோடு 181 உள்பட மொத்தம் 1398 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 48.21 ஆகும். அதிகபட்சமாக தேவாலாவில் ஒரே நாளில் 34 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

அவலாஞ்சியில் மழைப்பொழிவு குறைந்து உள்ளது.

குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் குன்னூர்-டால்பின் நோஸ் சாலையில் கரன்சி மற்றும் டால்பின்நோஸ் இடையே சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. மழையின் காரணமாக சாலையின் மேற்புறம் இருந்த பாறைகளுடன் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் சாலை ஒருபுறம் சேதம் அடைந்தது, இதனால் அந்த சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தடுப்பு சுவர் கட்டும் பணியில் நேற்று 10 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். மழையின் காரணமாக ஒதுங்கி நின்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பித்தனர்.

Similar News