செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்- அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவு

Published On 2020-04-22 05:45 GMT   |   Update On 2020-04-22 05:45 GMT
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் 100 நாள் வேலைதிட்டம், தொழிற்சாலைகள் இயங்க கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்களும் நேற்று முன்தினம் முதல் பணிக்கு திரும்பி உள்ளனர். இதனால் கடந்த 2 தினங்களாக புதுவையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி புதுவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் தமிழக பகுதிகளை சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊரடங்கு தளர்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் பல்வேறு தரப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், சுகாதாரத் துறைச்செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும், புதுவை மாநிலத்தில் மக்களின் அதிகப்படியான நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News