வாணரப்பேட்டையில் போலி மதுபாட்டில்கள் விற்ற பெயிண்டர் கைது
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் உள்பட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு வாணரபேட்டை நேதாஜி நகர் பகுதியில் போலி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போலி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது27) என்பதும், இவர் பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 32 போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும். மேலும் அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.2,150-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஓதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது ஒதியஞ்சாலை போலீசர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.