செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள தனி வார்டு.

கொரோனா வைரஸ்- கடலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் தனி வார்டு

Published On 2020-03-06 10:45 IST   |   Update On 2020-03-06 10:45:00 IST
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.
கடலூர்:

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். எனவே சுகாதார குழுவினர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது.

இந்தியாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு நாடு முழுவதும் உஷார்படுத்தியுள்ளது.

அதன்படி தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தேவையான உடல் கவசங்கள், முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு திரும்பியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் 52 பேர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அந்தந்த சுகாதார செவிலியர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு கூறுகையில், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி மருத்துவ அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

இதேபோல் விருத்தாசலம், பண்ருட்டி, வேப்பூர், திட்டக்குடி போன்ற 11 வட்டார மருத்துவமனைகளிலும் தனிவார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar News