செய்திகள்
விபத்து

வேப்பூர் அருகே விபத்து- 10ம் வகுப்பு மாணவி பலி

Published On 2020-03-02 12:40 IST   |   Update On 2020-03-02 12:40:00 IST
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று காலை கார் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஐவ்வதுகுடியில் மத்திய அரசால் நடத்தப்படும் மாதிரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வேப்பூர் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் கூத்தங்குடியை சேர்ந்த செந்தில்குமார் மகள் புவனா (15) என்பவர் இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் ஸ்ரீவித்யா (15) என்பவரும் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை 9 மணிக்கு மாணவிகள் ஸ்ரீவித்யா, புவனா ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று மாணவிகள் மீது மோதியது. இதில் 2 மாணவிகளும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மாணவி புவனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காயம் அடைந்த மற்றொரு மாணவி ஸ்ரீவித்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News