செய்திகள்
திவ்யா

ஆற்காடு அருகே திருமணமான 3 நாளில் சென்னை போலீஸ்காரர் மனைவி தற்கொலை

Published On 2020-02-11 12:31 IST   |   Update On 2020-02-11 12:31:00 IST
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே திருமணமான 3 நாளில் தாய் வீட்டுக்கு விருந்துக்கு வந்த சென்னை போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆற்காடு:

ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் திவ்யா (வயது 21). ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும் சென்னை திருநின்றவூரை சேர்ந்த போலீஸ்காரர் ராகவேந்திரன் (25) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி திருமணம் நடந்தது.

நேற்று திவ்யா கணவர் ராகவேந்திரனுடன் சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பேசினார்.

சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ள அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி சென்ற திவ்யா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டி அழைத்தனர். கதவு திறக்கப்படவில்லை. அதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு திவ்யா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திவ்யாவின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News